அரியலூரில் 7 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உறுதிமொழி எடுத்தனர்


அரியலூரில் 7 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் உறுதிமொழி எடுத்தனர்
x
தினத்தந்தி 5 Jun 2019 11:00 PM GMT (Updated: 5 Jun 2019 8:04 PM GMT)

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூரில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில், வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணபவன் ஆகியோர் அரியலூரில் திடீர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக செல்போனில் பேசியபடியே வாகனங்களை ஓட்டிய 7 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டிரைவர்களின் செல்போனில் உள்ள பதிவுகளின் மூலம் தொடர்ச்சியாக பேசியது கண்டுபிடிக்கப்பட்டு, தவறிழைத்த 7 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் 3 மாத காலம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வாகன டிரைவர்கள் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலையில் செல்போனில் பேசமாட்டோம், சாலை விதிகளை மதிப்போம், விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்குவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து விபத்துகளை தவிர்க்கும் வண்ணம் அரியலூர் புறவழிச் சாலைகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டும், இருசக்கர வாகனங்களில் செல்வோர்களுக்கு ஹெல்மெட் அணிவது குறித்தும், மது அருந்தி இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்காமல் இருக்க தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்போனில் பேசிக்கொண்டு கனரக வாகனங்களை இயக்குவதால், சாலையை பயன்படுத்தும் பிற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் விபத்தின் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே டிரைவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்திட வேண்டும் என வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவ்ராஜ் கேட்டு கொண்டார். 

Next Story