கணவர் வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் சாவு


கணவர் வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் சாவு
x
தினத்தந்தி 5 Jun 2019 10:35 PM GMT (Updated: 5 Jun 2019 10:35 PM GMT)

கணவர் வேலைக்கு செல்லாததால் காதல் திருமணம் செய்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருபுவனை,

திருபுவனை அருகே கலிதீர்த்தாள்குப்பம் வாய்க்கால்மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜவேலு. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி வினிதா (வயது 23). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ராஜவேலு மது குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லவில்லை. இதுபற்றி வினிதா கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ராஜவேலு வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார். கணவர் திட்டியதால் மனமுடைந்த வினிதா, எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார்.

இதற்கிடையில் வெளியே சென்றிருந்த ராஜவேலு சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் வினிதா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்த புகாரின்பேரில் திருபுவனை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பிரியா, பிரதாபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 2 ஆண்டுகளில் வினிதா இறந்ததால் தாசில்தார் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Next Story