குன்னம் பகுதிகளில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


குன்னம் பகுதிகளில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 6 Jun 2019 10:30 PM GMT (Updated: 6 Jun 2019 7:45 PM GMT)

குன்னம் பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

குன்னம்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வேப்பூர் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு, பல்வேறு யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு, கோவில் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வரதராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

வைத்தியநாத சாமி கோவில்

இதேபோல் குன்னம் அருகே கொத்தவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட ஸ்ரீதையல்நாயகி உடனுறை வைத்தியநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் 1,013 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டு பின்பு பல ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்தது. இதையடுத்து ஊர் மக்களின் முயற்சியால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழமை மாறாமல் மிகுந்த பொருட்செலவில் கட்டி முடிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3-ந் தேதி காலை முதல் இரவு வரை எஜமான சங்கல்பம், அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஸனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகனம், அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கிராம சாந்தியும் நடைபெற்றது. 4-ந் தேதி கோ பூஜை, லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீர்த்த சங்கரணம், அங்குரார்பணம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜை, அக்னி விபஜனம் பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

திருக்கல்யாண உற்சவம்

நேற்று முன்தினம் 2-ம் கால பூஜை, சோம கும்ப பூஜை, சூரிய பூஜை, மண்டப பூஜை, வேதிகா அர்ச்சனை, திரவியாஹாகுதி, பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், 3-ம் கால பூஜை, மண்டப பூஜை, வேதிகா அர்ச்சனை, கனிவகைகள், மூலிகைகள், பட்சணங்கள், மூலமந்திர ஹோமம், பூர்ணாஹூதி, யாத்ராஸ்தாபனம் ஆகியவை நடைபெற்றன. நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, பூர்ணாஹூதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, ராஜகோபுர கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் மூலவருக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 9 மணிக்கு சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

பக்தர்கள் தரிசனம்

கும்பாபிஷேக விழாவிற்கு சின்ன வெண்மணி, பெரிய வெண்மணி, கொத்தவாசல், புது குடிசை, நல்லறிக்கை, சீராநத்தம், கோவிந்தாபுரம், கொளப்பாடி வேப்பூர், குன்னம் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் பாலவிநாயகர், பாலமுருகன், மற்றும் பிடாரி செல்லியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

Next Story