கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு


கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 6 Jun 2019 10:13 PM GMT (Updated: 6 Jun 2019 10:13 PM GMT)

கலை விருதுகள் பெறுவதற்கு தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் கலைப்பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலை மன்றங்கள் செயல்படுகிறது. இந்த கலை மன்றங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டின் கலைப் பண்புகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் இந்த விருதுகள் 2012-2013-ம் நிதியாண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் இதுவரை 70 பேருக்கு கலை விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2018-2019-ம் ஆண்டுக்கான கலை விருதுகள் வழங்கப்பட உள்ளது. இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.

எனவே தேனி மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவை கூத்து, பொம்மலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், மரக்காலாட்டம், கோல்கால் ஆட்டம், கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன்-அரசியாட்டம், புலி ஆட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், குறவன்-குறத்தியாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புற கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 60 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்பட உள்ளது.

வயது மற்றும் கலைத் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த 5 கலைஞர்களுக்கு பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்.

தேசிய விருதுகள், மாநில விருதுகள் மற்றும் ஏற்கனவே மாவட்ட கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க கூடாது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்துடன் வயதுசான்று, முகவரி சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்களுடன் ‘உதவி இயக்குனர், மண்டல கலைப் பண்பாட்டு மையம், பாரதி முதல் தெரு, ரேஸ்கோர்ஸ் காலனி, தல்லாகுளம், மதுரை’ என்ற முகவரிக்கு வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story