கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை கலெக்டர் தகவல்


கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:30 PM GMT (Updated: 8 Jun 2019 3:09 PM GMT)

தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை அரசு விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தேனி,

இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 14 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 8 விடுதிகள், தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு ஒரு விடுதி என மொத்தம் 23 விடுதிகள் செயல்படுகின்றன. இதில் பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சேரலாம். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சேர்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாசார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.

விடுதியில் சேருவதற்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

இதற்கான விண்ணப்பங்களை அந்தந்த விடுதி காப்பாளர் அல்லது காப்பாளினிகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விடுதிக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந்தேதி கடைசி நாள். தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் விடுதிக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கும்போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கத் தேவையில்லை. விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே மாணவ, மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story