மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2019 10:00 PM GMT (Updated: 8 Jun 2019 4:01 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல், 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்காக மொத்தம் 28 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பள்ளி விடுதிகளில் 4 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகளும் சேர தகுதி உடையவர்கள் ஆவார்கள். இந்த விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ, மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். இந்த விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்தில் இருந்து படிக்கும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

தகுதியுடைய மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை மாதம் 15-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் யாதும் அளிக்க தேவையில்லை. தேர்வு செய்யப்பட்டு விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story