நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்


நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது - அமைச்சர் சி.வி.சண்முகம்
x
தினத்தந்தி 8 Jun 2019 11:30 PM GMT (Updated: 8 Jun 2019 11:10 PM GMT)

நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர்கள் டி.வி.குமார், வீரப்பன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் குணசேகரன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்று யாரும் ஓட்டு போடவில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்துதான் மக்கள் ஓட்டு போட்டு உள்ளனர்.

இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க. தோல்வியை சந்தித்தது. சிறுபான்மை ஓட்டுகளை இழந்ததற்கு காரணமே பா.ஜனதா கட்சிதான். தேர்தல் தோல்விக்கு அதுவும் ஒரு காரணம்.

விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் செம்மண் தோண்டி எடுத்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. பொன்முடிக்கு தண்டனை கிடைப்பது உறுதி.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

Next Story