ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 6:55 PM GMT)

செம்பனார்கோவில் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினர்.

பொறையாறு,

நாகை மாவட்டம், செம்பனார்கோவில் பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி நேற்று மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய பேரணிக்கு வட்ட செயலாளர் சீனுவாசன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.யும், கட்சியின் மாவட்ட செயலாளருமான நாகைமாலி பேரணியை தொடங்கி வைத்தார். ஆக்கூரில் தொடங்கிய பேரணி, திருக்கடையூர், டி.மணல்மேடு, தில்லையாடி, காட்டுச்சேரி, ஆயப்பாடி, சங்கரன்பந்தல், நல்லாடை, திருவிளையாட்டம் வழியாக சென்று செம்பனார்கோவிலை அடைந்து.

கோஷங்கள்

பேரணியின் போது காவிரி டெல்டா மாவட்டங்களை வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். விவசாயத்தையும், தொழிலாளர்களையும் அழிக்காதே என மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் ராசையன், கோவிந்தசாமி, கபிரியேல், மார்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story