மக்களுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு


மக்களுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது முத்தரசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Jun 2019 11:00 PM GMT (Updated: 9 Jun 2019 8:06 PM GMT)

மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது என புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் சிவகாமி ரத்ததான கழகத்தின் சார்பில் 100-வது ரத்ததான முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மூர்த்தி தலைமை தாங்கினார். மக்கள் நீதி மய்யம் சினேகன் முன்னிலை வகித்தார். முகாமை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

தொடர்ந்து முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த பிரச்சினையை எதிர்க்கட்சியினர் பார்த்து கொள்வார்கள் என்று பேசியது பொறுப்பற்ற பேச்சு. தேர்தல் பிரசாரத்தின் போது ராகுல் காந்தி கர்நாடகாவில் மேகதாது அணையை நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கட்டுவோம் எனக்கூறவில்லை. தவறான தகவலை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் பேசி வருகிறார். இந்த பிரச்சினையில் அவர் தன்னை காப்பாற்றி கொள்வதற்காக ராகுல் காந்தி மீது பழியை போடுகிறார்.

இந்த ஆண்டாவது தமிழகத்தில் குறுவை சாகுபடி நடைபெறும் என விவசாயிகள் நம்பியிருந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து 12-ந் தேதி நீர் திறக்கப்படாது என்று அரசு அறிவித்து உள்ளது. விவசாயிகள் மத்தியில் வேதனை அடைய செய்துள்ளது.

ஆணைய உத்தரவுப்படி 9 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசும், மத்திய அரசும் பெற்றுத்தர முயற்சிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்களுடைய கட்சி தலைமை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆட்சியை கலைந்தாலும், புதுச்சேரியில் செயல்படுத்த விடமாட்டோம் என்று அந்த மாநில முதல்-அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.

ஆனால் தமிழக முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில் மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்த நினைக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டமாக இருந்தாலும் சரி, 8 வழி சாலை திட்டமாக இருந்தாலும் சரி மக்களுக்கு எதிரான செயல்பாட்டையே அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளிலும் அரசு ஆய்வு செய்து முறையாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story