பெண்ணாடம் அருகே பாலம் கட்டும் பணியை பொது மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்


பெண்ணாடம் அருகே பாலம் கட்டும் பணியை பொது மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம்
x
தினத்தந்தி 9 Jun 2019 10:45 PM GMT (Updated: 9 Jun 2019 8:51 PM GMT)

பெண்ணாடம் அருகே பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி பொது மக்கள் போராட்டம் நடத்தினர்.

பெண்ணாடம்,

பெண்ணாடம் அருகே கோனூர் கிராமத்தில் உள்ள பழவாறு ஓடையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வந்தன. இந்த நிலையில் பாலம் பலத்த சேதமடைந்த காணப்பட்டால், அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் பெரும் அச்சம் அடைந்தனர்.

இதையடுத்து பொது மக்கள் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து அங்கிருந்த பழைய ஓடை பாலத்தை அகற்றிவிட்டு ரூ.1 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் தரமற்ற முறையில் பாலப்பணிகள் நடைபெற்று வருவதாக கூறி பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பாலப்பணிகள் தற்போது தரமற்ற முறையில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு கட்டுவதன் மூலம் பாலம் விரைவில் பலகீனமடைந்து இடிந்து விழும் அபாயம் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு பணம் வீணாவதோடு, பெரிய அளவில் விபத்தும் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தவிர்க்க பாலத்தை நல்ல தரத்துடன் கட்ட வேண்டும் என்று தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வரவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாலப்பணியை நல்ல தரத்துடன் மேற்கொள்ள வில்லையெனில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று கூறி விட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story