அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்


அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 10 Jun 2019 10:30 PM GMT (Updated: 10 Jun 2019 6:53 PM GMT)

அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக வழங்க வேண்டும் என கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜோதிமணி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன் கலந்து கொண்டு பேசினார்.

ஊர்வலம்

விழாவில் மேஜை, நாற்காலி, பீரோ, பாத்திரங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் பள்ளிக்கு வழங்கினர். முன்னதாக சீர்வரிசை பொருட்களை கிராம மக்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்தனர். நெடுவாக்கோட்டை நொண்டி வீரன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது.

விழாவில் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் விமலாரவி, எஸ்.எம்.டி. நிறுவன உரிமையாளர் கருணாநிதி, தன்னார்வலர் ரேணுகா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story