நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு உச்சிப்புளியில் மத்திய– மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு உச்சிப்புளியில் மத்திய– மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 8:33 PM GMT)

ராமநாதபுரம்–தனுஷ்கோடி நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சிப்புளியில் பொதுமக்கள் மத்திய–மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பனைக்குளம்,

மதுரை–பரமக்குடி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதனை தொடர்ந்து பரமக்குடி–ராமநாதபுரம் மற்றும் ராமநாதபுரம்–தனுஷ்கோடி வரை இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தற்போது நான்கு வழிச்சாலைக்கு சர்வே பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் பாதிக்கப்படுவதால் இந்த சாலைக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. மேலும் இந்த சாலையை மாற்றுப்பாதையில் செயல்படுத்தவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உச்சிப்புளி நகருக்குள் நான்கு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து நான்கு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று உச்சிப்புளி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆட்டோ நிறுத்தம் பகுதியில் வர்த்தக சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சீனிவாசன் தலைமை தாங்கினார். வர்த்தக சங்க தலைவர் அசரியா, ஆர்.ஆர்.ராமச்சந்திரன், கம்யூனிஸ்டு கட்சி ராமசாமி, வர்த்தகர்கள் முகமது நஹீப், ரவி, அமீன், செல்வம், ரஹீப் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம்–தனுஷ்கோடி நான்கு வழிச்சாலையை உச்சிப்புளி நகருக்கு வெளியே புறவழிச்சாலையாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், உச்சிப்புளியில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய–மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் அடுத்த கட்டமாக உச்சிப்புளியில் சாலை மறியலில் ஈடுபடுவது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story