விவசாய சங்கத்தினர், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


விவசாய சங்கத்தினர், மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 8:33 PM GMT)

திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினரும், மின்வாரிய ஊழியர்களும் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பத்தூர், கல்லல் ஒன்றியக் குழுவினர் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்திடவும், அதற்கான நிவாரணத் தொகையினை விவசாயிகளுக்கு உடனே வழங்கிடவும் தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் வீரபாண்டி, துணைச் செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு பால் உற்பத்தி சங்க மாநிலப் பொருளாளர் சங்கர் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டம் முழுவதும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் உடனே வழங்கவும், 3 ஆண்டுகளாக விடுபட்டுள்ள பயிர் இழப்பீட்டுத் தொகையை வழங்கவும், பால்உற்பத்திக்கான கொள்முதல் விலையை உயர்த்தவும் பேசப்பட்டது.

மேலும் காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு பாசன திட்டத்திற்கு நிதி ஒதுக்கி, திட்டத்தை நிறைவேற்றக் கோரியும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரியும், மாவட்டம் முழுவதிலும் உள்ள கண்மாய் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களை சீரமைக்கவும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கரும்பு சங்க மாவட்டத் தலைவர் தங்கபாண்டியன், பால் உற்பத்தி சங்க மாவட்டத் தலைவர் மாணிக்கம், செயலாளர் சேதுராமன் மற்றும் விவசாய சங்க ஒன்றிய துணைச் செயலாளர் அழகப்பன், துணைத் தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல திருப்பத்தூர் மின்வாரிய அலுவலகம் எதிரே மின்உதவி செயற்பொறியாளரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள், அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மின்வாரிய ஊழியர் அமைப்பின் தலைவர் அய்யாத்துரை தலைமை தாங்கினார். செயலர் வீரபாண்டி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய ஊழியர்களை சமுதாயம் சார்ந்த நோக்கில் வேறுபடுத்துவதாகவும், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் பணிச்சுமையை அதிகப்படுத்துவதாகவும், மின் கணக்கீட்டாளர்கள் விடுமுறையில் இருந்தால், அவர்களுக்கு பதில் சேமிப்புக் கணக்கீட்டாளர்களை வேலைக்குப் பயன்படுத்த வேண்டும். 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே அலுவலகம் வரும் போக்கை கண்டித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story