திருவாரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:30 PM GMT (Updated: 11 Jun 2019 7:08 PM GMT)

திருவாரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூரில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக குழந்தை தொழிலாளர் விழிப்புணர்வு உறுதிமொழியை வாசிக்க மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர். இதனையடுத்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பலகையில் கையெழுத்து போட்டு தொடங்கி வைத்தார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டினார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது-

குழந்தை தொழிலாளர் சட்டத்தில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எவ்வித பணியிலும் ஈடுபடுத்துவதும், 15 முதல் 18 வயதிற்குட்பட்ட வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகளை மீறுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்.

கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். குழந்தை தொழிலாளர் எவரேனும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் சைல்டு லைன் தொலைபேசி எண்:1098 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொண்டு தெரிவிக்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளை கடைகளிலோ, உணவகங்களிலோ, தொழில் நிறுவனங்களிலோ மற்றும் பட்டறையிலோ வேலைக்கு அமர்த்துவது சட்டபடி குற்றமாகும் இவ்வாறு கலெக்டர் கூறினார்.

ஊர்வலத்தில் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர். ரெயில் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் பழைய பஸ் நிலையம் வழியாக பழைய ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.

இதில் மாவட்ட சார்பு நீதிபதி கோவிந்தராஜன், உதவி கலெக்டர் முருகதாஸ், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், தாசில்தார் நக்கீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story