தொழில்துறையினர் வங்கிக்கடனை செலுத்த காலஅவகாசம் அளிக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் கோவை தங்கம் கோரிக்கை


தொழில்துறையினர் வங்கிக்கடனை செலுத்த காலஅவகாசம் அளிக்க வேண்டும் - மத்திய மந்திரியிடம் கோவை தங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2019 11:15 PM GMT (Updated: 11 Jun 2019 9:12 PM GMT)

வங்கிக் கடனை செலுத்த தொழில்துறையினருக்கு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று மத்திய நிதி மந்திரியிடம் கோவை தங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கோவை,

கோவை மாவட்டம் வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், த.மா.கா. மாநில மூத்த தலைவருமான கோவை தங்கம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய நிதி மந்திரியாக தாங்கள் பொறுப்பேற்ற பின், முதல் முறையாக தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்டு வருவது பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், பழைய தொழிற்சாலைகளை புனரமைக்கவும், வியாபார வளர்ச்சிக்கும் வங்கிகள் பல கோடி ரூபாய் கடன் வழங்குகின்றன.

ஆனால் கடன் கொடுத்த முதல் மாதமே வட்டியுடன் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்வதால் ஆலை உரிமையாளர்கள் கடும் நெருக்கடியை சந்திக்கிறார்கள். இதனால் தனியார்களிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெற்று வங்கி கடனை அடைக்கின்றனர்.

இதனால் தொடர்ந்து ஆலைகளை நடத்த முடியாமல் மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே தொழில்துறை முடக்கத்தை மீட்டெடுக்க வங்கிகள் நெருக்கடி கொடுப்பதை தளர்த்த வேண்டும். மேலும் வங்கிகள் மூலம் கடன் பெறுபவர்கள் முதல் தவணையை செலுத்த 6 மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும்.

தொழில் அபிவிருத்தி செய்ய தேவையான அளவு கடன் வழங்குவதுடன், வட்டி சதவீதத்தையும் குறைக்க வேண்டும். 3 மாதத்தில் கடன் தவணைகளை திருப்பி செலுத்த வில்லை என்றால் சொத்தின் மீது நடவடிக்கை எடுக்க வங்கிகள் முன்வருவதை தடுத்து, 6 மாதம் தவணை வழங்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரியை குறைத்து நாடு முழுவதும் ஒரே சீராக 5 சதவீதம் அமல்படுத்த வேண்டும். வங்கிகளின் நெருக்கடியை தளர்த்தி, தொழில்துறை சீராக இயங்க நடவடிக்கை மேற்கொண்டால் கோவை மட்டுமின்றி நாடுமுழுவதும் தொழில்துறை வளர்ச்சி அடையும். கோவை மாவட்டத்தில் நலிவடைந்து பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் மில்கள், தொழிற்சாலைகள் மீண்டும் புதுப்பொலிவு பெறும்.

பல ஆயிரம் பட்டதாரிகள் வேலைதேடி வெளி மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்படாது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அந்தஸ்தை மீட்டெடுக்க, சிறப்பு ஏற்பாடுகளை செய்ய தாங்கள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story