தாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன் நகை தப்பியது


தாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன் நகை தப்பியது
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 9:23 PM GMT)

தாராபுரத்தில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். பாதுகாப்பு பெட்டகத்தை திறக்க முடியாததால் 53 பவுன்நகை தப்பியது.

தாராபுரம்,

தாராபுரம் அனுமந்தாபுரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 82). வக்கீல். இவருடைய மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி விட்டது. இதனால் கணவன்–மனைவி இருவர் மட்டும் வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, கோவையில் உள்ள மகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலை பக்கத்துவீட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், கோலம் போடுவதற்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது பாலகிருஷ்ணன் வீட்டுக்கதவுகள் திறந்து கிடப்பதையும், கதவின் பூட்டு உடைந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் பாலகிருஷ்ணனின் மனைவியை, செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு வேலுமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகண்ணன் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டு இருந்து 2 பீரோக்களில் ஒரு பீரோ மட்டும் திறந்து கிடந்தது. ஆனால் அதில் எவ்வளவு பணம் மற்றும் நகை திருட்டு போனது என்று தெரியவில்லை. ஆனால் மற்றொரு பீரோவும், பாதுகாப்பு பெட்டகமும் திறக்கப்படாமல் அப்படியே இருந்தது.

இது பற்றிய தகவல் பாலகிருஷ்ணனுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அவரும் அங்கு வந்து சேர்ந்தார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திறந்து கிடந்த பீரோவில் வைத்து இருந்த ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மட்டும் திருட்டு போனதாகவும், அந்த பீரோவில் நகை எதும் இல்லை என்றும், வீட்டில் இருந்த மற்றொரு பீரோ மற்றும் பாதுகாப்பு பெட்டகத்தில் 53 பவுன்நகை இருந்ததாகவும், அவற்றை மர்ம ஆசாமிகளால் திறக்க முடியாததால் அவை தப்பியதாகவும் தெரிவித்தார். மேலும் மற்றொரு அறையில் வைக்கப்பட்டு இருந்து சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களும் தப்பியது.,

விசாரணையில் பாலகிருஷ்ணன் வெளியூர் சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் அவருடைய வீட்டிற்கு சென்று வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்த பீரோ சாவியை எடுத்து பீரோவை திறந்து அதில் வைத்து இருந்த பணத்தை திருடி சென்று உள்ளனர்.

இதையடுத்து திருப்பூரிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பாலகிருஷ்ணனின் வீட்டில் உள்ள பொருட்கள் மீது பதிருந்துள்ள கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் வெற்றி என்கிற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்ப நாய், வக்கீல் பாலகிருஷ்ணனின் வீட்டிலிருந்து அனுமந்தாபுரம் வழியாக பைவ்கார்னர் சென்று, பிறகு அங்கிருந்து சோளக்கடைவீதி செல்லும் சாலையில் வேகமாக ஓடி, ஜவுளிக்கடைவீதியில் உள்ள ஒரு தனியாருக்குச் சொந்தமான இரும்புக்கடையை அடைந்தது.

அங்கு சிறிது நேரம் சாலையின் இருபுறங்களிலும் மோம்பம் பிடித்தபடி சென்றுவிட்டு, பிறகு அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் வக்கீல் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து சேர்ந்தது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்க வில்லை. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆசாமிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பாலகிருஷ்ணன் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story