சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை மறுநாள் மந்திரி சபை விரிவாக்கம்?


சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் நாளை மறுநாள் மந்திரி சபை விரிவாக்கம்?
x
தினத்தந்தி 11 Jun 2019 11:30 PM GMT (Updated: 11 Jun 2019 9:37 PM GMT)

மராட்டிய மந்திரி சபை விரிவாக்கம் நாளை மறுநாள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

மராட்டிய சட்டசபைக்கு வரும் செப்டம்பர்- அக்டோபர் மாத வாக்கில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு மத்தியில் மந்திரி சபை விரிவுப்படுத்தப்படும் என முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் மந்திராலயாவில் நேற்று நடந்த மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு பா.ஜனதா மூத்த தலைவரும், நிதி மந்திரியுமான சுதீர் முங்கண்டிவார் அளித்த பேட்டியில், “சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு சில நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அதற்கு முன்பாக மராட்டிய மந்திரிசபை விரிவுபடுத்தப்படும்” என்றார்.

சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) கூடுவது குறிப்பிடத்தக்கது.


சிவசேனா கட்சியை சேர்ந்த தீபக் சாவந்த், பட்னாவிஸ் தலைமையிலான அரசில் சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தார். கட்சி மீண்டும் ஒருமுறை எம்.எல்.சி. வாய்ப்பு வழங்காததால் அவர் தனது மந்திரி பதவியை இழந்தார்.

இதேபோல் சட்டமன்ற விவகாரங்கள் துறையை நிர்வகித்து வந்த கிரிஷ் பாபத் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் மாநில மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மேற்கண்ட இருவர் வகித்த மந்திரி பதவிகள் தற்போது காலியாக உள்ளது.

இந்த நிலையில் பா.ஜனதா, சிவசேனாவை சேர்ந்த புதிய மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என தெரிகிறது.

இதேபோல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகேபாட்டீலுக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்வது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Next Story