சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் பலி லிப்ட் கேட்டு சென்ற போது பரிதாபம்


சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் பலி லிப்ட் கேட்டு சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 12 Jun 2019 9:30 PM GMT (Updated: 12 Jun 2019 12:42 PM GMT)

சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் பலியானான். ‘லிப்ட்‘ கேட்டு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

சாத்தான்குளம், 

சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் பலியானான். ‘லிப்ட்‘ கேட்டு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

பள்ளி மாணவன் 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சடையங்கிணறு காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவருடைய மகன் ஞானசெல்வம் (வயது 9). இவன் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு பஸ் அல்லது அந்த வழியாக செல்லும் யாரிடமாவது ‘லிப்ட்‘ கேட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கூடத்துக்கு ஞானசெல்வம் புறப்பட்டான். பஸ் ஏதும் வராததால் அந்த வழியாக நாசரேத்தில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்த லோடு ஆட்டோவை கையினால் சைகை காட்டி ‘லிப்ட்‘ கேட்டான். லோடு ஆட்டோ டிரைவரான நாசரேத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வண்டியை நிறுத்தி பின்னால் ஏறிக்கொள்ளுமாறு ஞானசெல்வத்திடம் கூறினார். அவனும் லோடு ஆட்டோவில் பின்னால் ஏறினான்.

சாவு 

ஆனால் லோடு ஆட்டோ ஞானசெல்வம் இறங்கும் இடத்தை கடந்து சென்றது. இதனால் பதறிப்போன ஞானசெல்வம் உடனடியாக ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து வெளியே குதித்தான். இதில் நிலைதடுமாறிய அவன் சாலையில் விழுந்தான். இதனால் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் ஞானசெல்வம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தான். இதை அறிந்த லோடு ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் வண்டியை நிறுத்தினார்.

இதுகுறித்து உடனடியாக சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஞானசெல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரிதாபம் 

இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் ஞானசெல்வத்தின் சித்தப்பா பெல்சன் அந்தோணி புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லோடு ஆட்டோ டிரைவர் முத்துக்குமாரை கைது செய்தார்.

சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story