செங்கோட்டை அருகே 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை கேரள வனத்துறையினர் மீட்டனர்


செங்கோட்டை அருகே 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை கேரள வனத்துறையினர் மீட்டனர்
x
தினத்தந்தி 12 Jun 2019 9:45 PM GMT (Updated: 12 Jun 2019 1:17 PM GMT)

ரப்பர் தோட்டத்தில் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

செங்கோட்டை, 

ரப்பர் தோட்டத்தில் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர்.

பள்ளத்தில் தவறி விழுந்த குட்டி யானை 

கேரள மாநிலம் அச்சன்கோவிலை அடுத்த கல்லாறு வனப்பகுதியில் ஏராளமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன. நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே தமிழக–கேரள மாநில எல்லையை அடுத்து அமைந்துள்ள இப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கல்லாறு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக, ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. இந்த நிலையில் அந்த வழியாக யானைக்கூட்டம் சென்றது. அப்போது 6 மாத குட்டி யானை ஒன்று எதிர்பாராதவிதமாக ரப்பர் தோட்டத்தில் உள்ள சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தது. அந்த பள்ளத்தில் சேறும் சகதியுமாக இருந்ததால், குட்டி யானை வெளியேற முடியாமல் தவித்தது.

சாய்வான பள்ளம் தோண்டி மீட்பு 

மற்ற யானைகள் அந்த குட்டி யானையை மீட்க முயன்றும் முடியவில்லை. இதனால் அந்த யானைகள் பிளிறியவாறு இருந்தன. உடனே அங்கு சென்ற கேரள வனத்துறையினர் பட்டாசு வெடித்து, யானைக்கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பள்ளத்தில் குட்டி யானை சிக்கி தவிப்பதை அறிந்தனர்.

தொடர்ந்து வனத்துறையினர் அந்த பள்ளத்தின் அருகில் சாய்வாக மற்றொரு பள்ளத்தை தோண்டினர். தொடர்ந்து குட்டி யானை சாய்வான பள்ளம் வழியாக வெளியே வந்தது. உடனே அந்த குட்டி யானை சிறிது தூரம் ஓடிச் சென்று, வனப்பகுதியில் இருந்த யானைக்கூட்டத்துடன் சேர்ந்தது. தாய் யானை அந்த குட்டி யானையை அழைத்து சென்றது. இது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Next Story