தாளவாடி அருகே கார் கவிழ்ந்து டிரைவர் பலி; 4 பேர் படுகாயம்


தாளவாடி அருகே கார் கவிழ்ந்து டிரைவர் பலி; 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 6:33 PM GMT)

தாளவாடி அருகே கார் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள இக்கலூர் பகுதியை சேர்ந்தவர் சிக்கு வீரப்பா. இவருடைய மனைவி பாரதி. இவர்களுக்கு மது (வயது 19) என்ற மகன் உள்ளார். இவர் பெங்களூருவில் ‘கால் டாக்சி’ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து இக்கலூருக்கு காரில் வந்தார்.

இக்கலூர் வந்தபின்பு மது தன்னுடைய நண்பர்களான அதேப்பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் (18), மல்லு (18), வீரபக்ஷா (17), சித்தராஜ் (19) ஆகியோருடன் காரில் தாளவாடியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். காரை மது ஓட்டினார்.

இந்த கார் தாளவாடி அருகே சிக்கள்ளி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 5 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மதுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்தவிட்டதாக தெரிவித்தனர். மற்ற 4 பேருக்கும் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த மதுவின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.


Next Story