குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை


குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 6:44 PM GMT)

குடோனில் பதுக்்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சை மாநகராட்சி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி விற்பனை செய்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது ெ்தாடர்பாக அதிகாரிகளும் அடிக்கடி சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, பதுக்கி வைத்திருந்தாலோ அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை உத்தரவுப்படி, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் மேற்பார்வையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கலை கண்காணிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொரு குழுவிலும் 6 துப்புரவு ஆய்வாளர்கள், 15 பணியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல் குறித்து அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துப்புரவு ஆய்வாளர்கள் ஜோசப் சேவியர், ரஞ்சித், பொன்னார் மற்றும் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள குடோனுக்கு நேற்று காலை சோதனை நடத்துவதற்காக சென்றனர்.

அப்போது குடோன் பூட்டி இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 20 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் பிளாஸ்டிக் பொருட்களை வேன் மூலம் ஏற்றி மறுசுழற்சி செய்வதற்காக உரகிடங்குக்கு கொண்டு சென்றனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story