பண்ருட்டியில் பட்டப்பகலில் பயங்கரம், ஜாமீனில் வந்த பெட்டிகடைக்காரர் வெட்டிக்கொலை - மர்மகும்பல் வெறிச்செயல்


பண்ருட்டியில் பட்டப்பகலில் பயங்கரம், ஜாமீனில் வந்த பெட்டிகடைக்காரர் வெட்டிக்கொலை - மர்மகும்பல் வெறிச்செயல்
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 6:47 PM GMT)

பண்ருட்டியில் ஜாமீனில் வந்த பெட்டிகடைக்காரரை மர்ம கும்பல் கத்தியால் வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வ.உ.சி. தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் பாவாடை என்கிற சுந்தரமூர்த்தி(வயது 45). அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்த இவருக்கு திருமணம் ஆகவில்லை. அதேபகுதியை சேர்ந்தவர் பண்ருட்டி நகரசபை முன்னாள் தலைவர் பச்சையப்பன். இவரது பேரன் ஹரிஸ்(19). இவர் புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த நவம்பர் மாதம் ஹரிஸ் சொந்த ஊருக்கு வந்திருந்த போது, அவரை சுந்தரமூர்த்தி கத்தியால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த ஹரிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுந்தரமூர்த்தியை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தற்போது சுந்தரமூர்த்தி சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்து, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். நேற்று காலை சுந்தரமூர்த்தி தனது வீட்டின் அருகே உள்ள சப்பானி செட்டி தெருவில் நடந்து சென்றார்.

அப்போது அவரை, 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வழிமறித்து, திடீரென கத்தியால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தக்காயங்களுடன் நிலைகுலைந்து போன சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து பலியானார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அப்போது அவர்கள் பயன்படுத்திய கத்திகளை அங்குள்ள கோவிலின் அருகே வீசிச் சென்றனர்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள தெருவில் நடந்த இந்த சம்பவத்தால், அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கிடந்த சுந்தரமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் பயன்படுத்தியை கத்திகளையும் அவர்கள் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அங்குள்ள வீடுகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுந்தரமூர்த்தி, வக்கீலுக்கு படிக்காமலே தான் ஒரு வக்கீல் என்று கூறி வந்துள்ளார். மேலும் ஒரு அமைப்பில் மாநில சட்ட ஆலோசகராக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் ஒருவர் வழக்கு தொடர்பாக சுந்தரமூர்த்தியை சந்தித்துள்ளார். அவரிடம் தான், அந்த வழக்கை நடத்தி வெற்றி பெற செய்து தருவதாக கூறிய சுந்தரமூர்த்தி, தோல்வியடைந்து விட்டார். இதனால் அவரை தேடி வந்தவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் மருத்துவ கல்லூரி மாணவர் ஹரிசை கொலை செய்ய முயன்ற வழக்கில் சுந்தரமூர்த்தியும் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அப்போது ஜெயிலின் உள்ளே வைத்து சுந்தரமூர்த்திக்கும், அவரால் பாதிக்கப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் சுந்தரமூர்த்தி ஜாமீனில் வந்தார். இதை பயன்படுத்தி அவர் கொலை செய்யப்பட்டாரா?, அல்லது முன்னாள் நகரசபை தலைவர் பச்சையப்பன் குடும்பத்திற்கு இடையே இருந்த முன்விரோதத்தின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் பண்ருட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டியில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கரம் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story