தேவூர் அருகே கோனேரிப்பட்டி கதவணை நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரம்


தேவூர் அருகே கோனேரிப்பட்டி கதவணை நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 7:34 PM GMT)

தேவூர் அருகே கோனேரிப்பட்டி கதவணை நீர்த்தேக்க பாலம் சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தேவூர், 

மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி தண்ணீரை செக்கானூர் நீர் மின் நிலையம், நெரிஞ்சிப்பேட்டை நீர் மின் நிலையம். கோனேரிப்பட்டி நீர் மின் நிலையம், ஊராட்சிக்கோட்டை நீர்மின் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேக்கி வைக்கப்பட்டு தினசரி மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் தேவூர் அருகே கோனேரிப்பட்டி கதவணை நீர்த்தேக்க பாலத்தில் மட்டுமே சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினசரி சேலம், எடப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோனேரிப்பட்டி கதவணை பாலத்தின் வழியாக வாகனங்கள் பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, பூதப்பாடி, கோபி, சென்னம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறது.

இந்தநிலையில் பாலத்தின் இணைப்பு ஆங்கிள்கள் மாற்றப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தின் மூலம் தொழிலாளர்கள் கடந்த மே 4-ந்தேதி முதல் பாலம் சீரமைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாலத்தை இணைக்கும் 21 இணைப்பு பகுதிகளில் உள்ள பழைய ஆங்கிள்களை நீக்கி விட்டு புதியதாக ஆங்கிள்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணி ஆரம்பித்து ஒரு மாதம் முடிந்துள்ளது, இன்னும் 2 மாதங்களில் பணி முடிக்கப்படும் என்றும், அதுவரை பாலத்தில் பஸ்கள் செல்வதற்காக விடப்பட்ட இடைவெளியில் வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டும், என்றும் அலுவலர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story