குழந்தைைய தர மறுத்ததால் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது


குழந்தைைய தர மறுத்ததால் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 7:47 PM GMT)

குழந்தையை தர மறுத்ததால் மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகரை சேர்ந்தவர் சக்திவேல் (வயது28). இவரது மனைவி சாந்தி (26). இவர்களுக்கு 9 மாத ஆண் குழந்தை உள்ளது. ஐ.டி.ஐ. படித்துள்ள சக்திவேல் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தார்.

இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. கணவரிடம் கோபித்துக்கொண்டு சாந்தி கைக்குழந்தையுடன் ஸ்ரீரங்கம் கீழ வாசல் அம்பேத்கர் நகரில் உள்ள தனது தந்தை முத்து கோபால் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் தனது நண்பர் கிறிஸ்டியுடன் ஸ்ரீரங்கத்தில் உள்ள மாமனார் முத்து கோபால் வீட்டுக்கு சென்றார். எனது குழந்தையை கொடு என தனது மனைவியிடம் கேட்டு தகராறு செய்தார்.

அவர் குழந்தையை கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேல் திடீர் என பெட்ரோல் நிரப்பி ைவத்திருந்த பாட்டிலை சாந்தி மீது வீசினார். ஆனால் அது குறி தவறி கீழே விழுந்து பெட்ரோல் குண்டு போல் வெடித்து சிதறியது.

கீழே விழுந்து வெடித்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் கேட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு விரைந்து வந்து சக்திவேலை கைது செய்தனர். தப்பிஓடிய கிறிஸ்டியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story