செங்கல்பட்டு அருகே அடுக்குமாடிகுடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு; கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை


செங்கல்பட்டு அருகே அடுக்குமாடிகுடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு; கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Jun 2019 11:30 PM GMT (Updated: 12 Jun 2019 7:47 PM GMT)

செங்கல்பட்டு அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. இறந்தவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செங்கல்பட்டு,

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புறம் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியபடி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில்வே துறை மூலம் கட்டிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்ததால் அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமானப்பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சவரிமுத்து என்பவர் அடுக்குமாடி கட்டிடத்தில் காவலாளியாக உள்ளார்.

இவர் கட்டிடத்தின் 14–வது மாடிக்கு சென்றபோது தூக்கில் தொங்கிய நிலையில் மனித எலும்புக்கூடு ஒன்று இருந்தது. இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அந்த எலும்புக்கூட்டை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், இறந்து போனவர் 25 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், இறந்து ஒரு மாதம் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்றும், அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்து விட்டு உடலை தொங்கவிட்டு சென்றார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story