அரசு அதிகாரிகள் 2 பேர் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை - பல கோடி ரூபாய் நகைகள், சொத்து பத்திரங்கள் பறிமுதல்


அரசு அதிகாரிகள் 2 பேர் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை - பல கோடி ரூபாய் நகைகள், சொத்து பத்திரங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Jun 2019 9:30 PM GMT (Updated: 12 Jun 2019 8:05 PM GMT)

அரசு அதிகாரிகள் 2 பேருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர்களுடைய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர்.

மங்களூரு,

பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில், அரசு அதிகாரிகள் 2 பேருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அவர்களுடைய அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளையும், சொத்து பத்திரங்களையும் ஊழல் தடுப்பு படையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டாவில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் உதய் ஜப்பி. அதேபோல் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள மாவட்ட கனிம வளத்துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் மகாதேவப்பா.

இந்த 2 அரசு அதிகாரிகளும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் சென்றன. இதுதொடர்பான புகார்கள் மாநில ஊழல் தடுப்பு படைக்கும் சென்றன. அதன்பேரில் இந்த 2 அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளும்படி மேற்கு மண்டல ஊழல் தடுப்பு படையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்பேரில் நேற்று மேற்கு மண்டல ஊழல் தடுப்பு படை அதிகாரிகள், உத்தர கன்னடா மற்றும் தட்சிண கன்னடா மாவட்ட ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அதிகாரிகள் உதய் ஜப்பி மற்றும் மகாதேவப்பாவின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பெலகாவி மாவட்டம் அனகோல் அருகே பாக்யா நகர் பகுதி கிரிஷி காலனியில் உள்ள அதிகாரி உதய் ஜப்பியின் வீடு, உத்தர கன்னடா மாவட்டம் ஜோய்டாவில் அமைந்திருக்கும் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள உதய் ஜப்பியின் அலுவலகம், உத்தர கன்னடா மாவட்டம் தண்டேலி நகர தாலுகா அலுவலகத்தில் அமைந்திருக்கும் அவருடைய மற்றொரு அலுவலகம், தண்டேலி பகுதியில் அமைந்திருக்கும் உதய் ஜப்பியின் தாயார் வசித்து வரும் வீடு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.

அதேபோல் பெங்களூரு சிடேடஹள்ளியில் உள்ள மகாதேவப்பாவின் வீடு, மங்களூரு கத்ரி அருகே கம்பலா சாலையில் உள்ள மகாதேவப்பாவுக்கு சொந்தமான மற்றொரு வீடு, சித்ரதுர்கா மாவட்டம் ஹொலல்கெரேவில் உள்ள இன்னொரு வீடு, மங்களூரு மல்லிகட்டே பகுதியில் அமைந்திருக்கும் மகாதேவப்பாவின் அலுவலகம் ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின்போது 2 அதிகாரிகளும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், கணக்கில் காட்டாமல் பல கோடி ரூபாய்க்கு நகைகள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கியிருந்ததும் தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அதிகாரிகள் 2 பேரின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், கணக்கில் காட்டப்படாத சொத்து பத்திரங்கள், நகைகள் ஆகியவற்றை ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

அரசு அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படையினர் சோதனை நடத்திய சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story