ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


ஆதிதிராவிடர்-பழங்குடியினர் விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 8:16 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு கல்லூரி மாணவர் விடுதியும், ஒரு ஐ.டி.ஐ. மாணவர் விடுதியும், 13 பள்ளி மாணவர் விடுதிகளும், 7 பள்ளி மாணவிகள் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் விடுதிகளில் சேர்ந்து பயனடையலாம். விடுதியில் சேர மாணவ-மாணவிகளின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விடுதியில் இருந்து மாணவர் குடியிருப்பு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது.

விடுதிகளில் 3 வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது. 2019-20-ம் ஆண்டிற்கான விடுதியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை விடுதி காப்பாளர்களிடம் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ஆதார் அட்டை நகல் மற்றும் மாணவ-மாணவிகளின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை இணைத்து, அந்தந்த விடுதி காப்பாளர்களிடம், பள்ளி விடுதிகளுக்கு வருகிற 25-ந் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதிக்குள்ளும் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story