சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை; மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்


சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை; மருத்துவ கல்லூரி முதல்வர் தகவல்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 8:21 PM GMT)

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் மிக குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்து சாதனை படைத்தாக மருத்துவ கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை மருத்துவ கல்லூரி முதல்வர் சந்திரிகா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:– கர்ப்பிணிகளுக்கு கர்ப்பமான 37 முதல் 39 வாரத்திற்குள் குழந்தை பிறந்தால் அதை சாதாரண பிரசவம் என்பார்கள். அதற்கு முன்பாக பிறந்தால் அதை குறை பிரசவம் என்பது அழைப்பது வழக்கம். சாதாரண பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 2½–யில் இருந்து 3½ கிலோ வரை எடை இருக்கும். இந்த எடையை விட குறைவான எடையில் குழந்தை பிறந்தால் அதை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்.

சிவகங்கை மருத்துவ கல்லூரியில் மாதம் 300 முதல் 350 குழந்தைகள் வரை பிறக்கிறது. இதில் உரிய எடை மற்றும் உடல் நலத்துடன் உள்ள குழந்தைகளை பிரசவம் ஆன ஒரு சில நாட்களில் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவோம்.

இதில் சுமார் 150 குழந்தைகள் வரை பல்வேறு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதித்து குணப்படுத்தி அனுப்புவோம். சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கடந்த ஓராண்டில் எடை குறைவாக பிறந்த குழந்தைகளில் சுமார் 15குழந்தைகளை குணப்படுத்தி அனுப்பியுள்ளோம். தற்போது சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காளையார்கோவில் அருகே உள்ள மரக்காத்தூரைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவரது மனைவி மஞ்சுளா(வயது32) என்பவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19–ந் தேதி அன்று பெண் குழந்தை பிறந்தது.

இந்த குழந்தை மிக குறைவாக சுமார் 750கிராம் எடையுடன் பிறந்தது. இதனால் இந்த குழந்தையை தனியறையில் வைத்து கடந்த 1½மாதத்திற்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சையில் அந்த குழந்தை உடல் நலம் தேறியதால் தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்க உள்ளோம். சாதாரணமாக இதுபோல் சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகளில் ரூ.5லட்சம் வரை செலவாகும். ஆனால் முதல்– அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் எவ்வித செலவும் இல்லாமல் அந்த குழந்தைக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டுஉள்ளது.

இதேபோல் குறைவான எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு ஏதாவது உடல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அந்த குழந்தைகளை இங்கு வரவழைத்து உரிய பரிசோதனை செய்து வருகிறோம். இதன் அடிப்படையில் ஏற்கனவே குறைந்த எடையுடன் பிறந்த சிவகங்கையை அடுத்த திருமண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அழகுமீனாள் மற்றும் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்குடியைச் சேர்ந்த ஜோதி ஆகிய 2பேரின் குழந்தைகளையும் தற்போது இங்கு வரவழைத்து அந்த குழந்தைகளுக்கு கண்பரிசோதனை, இதய பரிசோதனை ஆகியவை செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story