காங்கேயம் போலீஸ் நிலையம் அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதார சீ்ர்கேடு ஏற்படும் அபாயம்


காங்கேயம் போலீஸ் நிலையம் அருகே குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் சுகாதார சீ்ர்கேடு ஏற்படும் அபாயம்
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 10:33 PM GMT)

காங்கேயம் போலீஸ் நிலையம் அருகே கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.

காங்கேயம், 

காங்கேயம் நகரில் பங்களாபுதூர், களிமேடு, உடையார் காலனி, கோவை ரோடு பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடை கழிவு நீர் மற்றும் மழை நீர், சாக்கடை கால்வாய் வழியாக சென்று போலீஸ் நிலையம் அருகேயுள்ள ரவுண்டானா வழியாக அகிலாண்டபுரம் குளத்தை அடைகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் ரவுண்டானா அருகே கரூர் சாலையில் சாக்கடை கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் கால்வாயை அடைத்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த வழியாக சாக்கடையில் வரும் கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழியில்லாமல் அகிலாண்டபுரம் செல்லும் பிரிவில் குளம்போல தேங்கி நிற்கிறது. இந்த கழிவு நீரில் ஈ, கொசு உற்பத்தியாவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் அகிலாண்டபுரம், சாம்பவலசு உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் சாக்கடை நீரில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வாகனங்கள் மூலம் அகற்றுவதாகக் கூறினாலும் இதுவரை அந்தப் பணிகளைச் செய்யவில்லை.

தற்போது கோடை மழைச்சாரல் விழும் நிலையில் சிறிய அளவில் மழை பெய்தாலும் அதிகளவில் சாக்கடையில் கழிவு நீர் பெருக்கெடுத்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நிலை உள்ளதால் விரைவாக சாக்கடை பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story