வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 25 சதவீதம் மானியத்துடன் தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–
கடனுதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில் 25 சதவீதம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 வயதுக்கு மேற்பட்ட அதிகபட்சம் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவர். சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளர்த்தப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரை) மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் இருந்து கடன் அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.
விண்ணப்பம்
நடப்பு நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் ஆர்வம் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story