நெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கைது


நெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கைது
x
தினத்தந்தி 13 Jun 2019 9:30 PM GMT (Updated: 13 Jun 2019 1:28 PM GMT)

நெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லை கோர்ட்டுக்கு ஆயுதங்களுடன் வந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோர்ட்டுக்கு காரில் ஆயுதங்களுடன்... 

நெல்லை கோர்ட்டில் போலீசார் நேற்று வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், கோர்ட்டுக்கு வந்த வாகனங்களில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வேகமாக வந்த ஒரு காரை வழிமறித்து போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த காரில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த கார் மற்றும் அதில் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 6 பேரையும் பாளையங்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

6 பேர் கைது 

போலீசாரின் விசாரணையில், காரில் வந்தவர்கள் சேரன்மாதேவியைச் சேர்ந்த இசக்கிராஜ் (வயது 28), குமார் (38), சங்கர் என்ற சதீஷ் (22), செல்லையா (28), செல்லக்கண்ணு (23), பாளையங்கோட்டையை சேர்ந்த ஆறுமுக இசக்கி (38) என்பதும், இவர்கள் 6 பேர் மீதும் கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும், எனவே அவர்கள் கோர்ட்டில் ஆஜராக வந்ததும் தெரிய வந்தது.

மேலும் ஆறுமுக இசக்கியை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றதும், எனவே அவர்கள் தற்காப்புக்காக ஆயுதங்களை எடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story