தி.மு.க., அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


தி.மு.க., அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 6:39 PM GMT)

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் சொத்துகளை விற்று விவசாயிகளின் கடன்களை அடைக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்சி,

திருச்சி விமான நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் ஒற்றை தலைமை அமித்ஷா என்று கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் ஒரு கருத்தை கூறி உள்ளார். இன்றைக்கு தலைமையே இல்லாத ஒரு கட்சி, கூட்டணி தயவில் ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர் சொன்ன கருத்தை திரும்பபெற வேண்டும். ஏற்கனவே, பாரதீய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்த கட்சி, இதுபோன்ற கருத்தை பேசும்போது நாகரிகமாக பேச வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்தது தேர்தல் கமிஷன்தான் என்று கூறி இருக்கிறார். அப்படியானால், 37 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் தவறு செய்துள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டால், அவர் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

நாடு முழுவதும் பாரதீய ஜனதா கட்சி சிறப்பான வெற்றியை பெற்று சரித்திரம் படைத்துள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-பாரதீய ஜனதா கூட்டணி அமைத்து போட்டியிட்டு தோல்வி கண்டுள்ளோம். இந்த கூட்டணி தோற்றாலும் ஒருவர் மீதே அதற்கான சுமையை வைக்காமல், தோல்வி பொறுப்பை இருவரும் பகிர்ந்து கொள்வதுதான் சரியானது.

கூட்டணி என்பது ஒவ்வொரு தேர்தலையும் பொறுத்தது. இந்த கூட்டணி தொடர வேண்டும் என்றும் சொல்ல மாட்டேன். அதே வேளையில் தொடரக்கூடாது என்றும் சொல்ல மாட்டேன். உள்ளாட்சி தேர்தலில் இக்கூட்டணி தொடருமா? என்பது அந்தந்த காலத்திற்குட்பட்டது.

தமிழ்நாட்டில் விவசாயிகளின் கடன்களையும், மாணவர்களின் கல்விக்கடன்களையும் தள்ளுபடி செய்வோம் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வாக்குறுதி அளித்தனர். இப்போது அக்கூட்டணியில் 37 எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர்.

எனவே, தேர்தல் வாக்குறுதிப்படி, இன்னும் 6 மாத காலத்தில் வெற்றி பெற்ற 37 எம்.பி.க்களும் அவர்களின் சொத்துகளை விற்றாவது ஓட்டுப்போட்ட மக்களுக்கு விவசாய கடன்களையும், படிப்புக்காக மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்களையும் அடைத்து கொடுத்தாக வேண்டும்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி வருகிறது. அவர்கள் காலத்தில் செய்யக்கூடிய விஷயத்தை சொல்லாமல் புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்புவது அவர்களுக்கு வாடிக்கை. தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் பொறுப்பு 50 ஆண்டுகளாக ஆண்டவர்களுக்கும் உண்டு. எனவே, குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.

மேலும் தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்துவிடக்கோரி, 37 எம்.பி.க்களும் கர்நாடகாவில் நடைபெறும் கூட்டணி கட்சி அரசிடம் சென்று முறையிட வேண்டும். காவிரி தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு செய்யவேண்டிய பணிகளை கட்டாயம் செய்யும்.

இவ்வாறு அவர்் கூறினார்.

Next Story