ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது இயக்குனர் கவுதமன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது இயக்குனர் கவுதமன் பேட்டி
x
தினத்தந்தி 13 Jun 2019 11:15 PM GMT (Updated: 13 Jun 2019 7:00 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என இயக்குனர் கவுதமன் கூறினார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டினம் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள மக்களை இயக்குனர் கவுதமன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தடுக்க மாநில அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஹைட்ரோ கார்பன் போன்ற மண் வளங்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட கரியாப்பட்டினத்தை சேர்ந்த பெண்கள் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு சிலரை கைதும் செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த செயல் கண்டிக்கத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இதுபோன்ற திட்டங்களை தடுத்து நிறுத்தினார். ஆனால் தற்போதைய அரசு அதற்கு நேர் மாறாக உள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டம், நீட் போன்றவைகளை தடுத்து நிறுத்த தி.மு.க. நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

பேட்டியின் போது கரியாப்பட்டினம் ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழு நிர்வாகிகள் சரவணமுத்து, நடராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரியாப்பட்டினம் செண்பகராயநல்லூர் ரெயில்வே நிலைய சாலையோரம் 25 ஆண்டுகளுக்கு முன்பு எண்ணெய் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளை ஆய்வு கிணறு அமைக்கப்பட்டிருந்த வளாகத்தில் எஞ்சியுள்ள கட்டமைப்புகளை இயக்குனர் கவுதமன் பார்வையிட்டார்.

Next Story