ஏழ்மையான நிலையிலும் சாதித்த ஈரோடு மாணவர் சர்வதேச சிலம்பம் போட்டிக்கு தேர்வு பெற்றார்


ஏழ்மையான நிலையிலும் சாதித்த ஈரோடு மாணவர் சர்வதேச சிலம்பம் போட்டிக்கு தேர்வு பெற்றார்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 9:07 PM GMT)

ஏழ்மையான நிலையிலும், சர்வதேச சிலம்பம் போட்டிக்கு தேர்வு பெற்று ஈரோடு மாணவர் சாதனை படைத்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் சம்பத். ஆட்டோ டிரைவர். இவருடைய மகன் எஸ்.கார்த்திக் ராஜா. ஜெ.கே.கே. கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.சி.ஏ. பட்டப்படிப்பு படித்து வருகிறார். இளம் வயதிலேயே சிலம்பம் பயிற்சி பெற்ற எஸ்.கார்த்திக் ராஜா ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பில் சேர்ந்தார்.

அவரது சிலம்பம் விளையாட்டு ஆர்வத்தை பார்த்த பள்ளிக்கூட ஆசிரியர்கள் உற்சாகப்படுத்தினார்கள். பள்ளிக்கூட அளவிலான போட்டிகள், மாவட்ட, மாநில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய கார்த்திக் ராஜா தொடர்ந்து பல வெற்றிகளை குவித்து உள்ளார்.

இவர் சமீபத்தில் நாகர்கோவிலில் நடந்த ஆசிய சிலம்பம் சாம்பியன் கோப்பை போட்டியில் கலந்து கொண்டு இந்திய அணிக்காக விளையாடினார். இதில் இரட்டை கம்பு வீச்சு, கம்பு சண்டை ஆகிய போட்டிகளில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் வருகிற ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச சிலம்பம் போட்டிக்கு இந்திய அணி சார்பில் விளையாட தேர்வு பெற்று உள்ளார். ஏழ்மையான நிலையிலும் சிலம்பம் விளையாட்டில் கார்த்திக் ராஜா தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறார்.

சிலம்பம் விளையாட்டின் மூலம் ஈரோடு மாவட்டத்துக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இருக்கும் மாணவர் கார்த்திக் ராஜாவுக்கு ஈரோடு சி.எஸ்.ஐ. பள்ளிக்கூடத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிக்கூட தாளாளர் எல்.ராபி மனோகர், தலைமை ஆசிரியர் இ.பால் அசோக் ரத்தினகுமார், உடற்கல்வி இயக்குனர் டி.ராஜ்குமார், உடற்கல்வி ஆசிரியர் எஸ்.கிறிஸ்டோபர் ஆகியோர் மாணவர் கார்த்திக்ராஜா மற்றும் பயிற்சியாளர்கள் கலைத்தாய் அறக்கட்டளை மாதேஸ்வரன், பொன் லோகே‌‌ஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்கள்.

இதுகுறித்து மாணவர் கார்த்திக் ராஜா கூறியதாவது:-

எனது தந்தை ஆட்டோ டிரைவராக உள்ளார். மிகவும் ஏழ்மையான நிலையில் என்னையும், எனது அண்ணனையும் படிக்க வைத்து வருகிறார். எனக்கு கலைத்தாய் அறக்கட்டளை மூலம் இலவசமாக சிலம்பம் பயிற்சி கிடைக்கிறது.

இதுவரை பள்ளிக்கூட ஆசிரியர்களின் உதவியால் பல்வேறு போட்டிகளுக்கு சென்று வந்தேன். தற்போது சர்வதேச போட்டிக்காக மலேசியா செல்லும் வாய்ப்பு உள்ளது. இதற்கு போதிய நிதி இல்லாமல் சிரமப்படுகிறேன். எனக்கு நிதி உதவி கிடைத்தால் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story