திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலி
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 9:31 PM GMT)

திருவள்ளூர் அருகே தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற கல்லூரி மாணவி மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த சென்றராயன் பாளையம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் கிரிஜா (வயது 20). இவர் திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் கொசவன்பாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை சீனிவாசன் தன்னுடைய மகள் கிரிஜாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு கல்லூரியில் விடுவதற்காக சென்று கொண்டிருந்தார். அவர்கள் திருவள்ளூரை அடுத்த கிருஷ்ணா கால்வாய் அருகே சென்று கொண்டி ருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த கிரிஜா சம்பவ இடத்திலேயே தந்தை கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்துபோனார். சீனிவாசனின் வலது கால் முறிந்து தலையில் பலத்த காயம் ஏற்பட் டது.

அதோடு மட்டுமல்லாமல் மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவள்ளூரை அடுத்த ஒதப்பை கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் (30) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த சீனிவாசன், விசுவநாதன் இருவரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story