நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார்: நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - மும்பை கோர்ட்டில் போலீஸ் தகவல்


நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார்: நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை - மும்பை கோர்ட்டில் போலீஸ் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:56 PM GMT (Updated: 13 Jun 2019 10:56 PM GMT)

பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்திய ‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து, பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018–ம் ஆண்டு பரபரப்பு பாலியல் புகார் அளித்தார்.

மும்பை, 

‘ஹார்ன் ஓகே பிளீஸ்’ என்ற சினிமா படப்பிடிப்பின் பாடல் காட்சியின் போது, நானா படேகர் தன்னை தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் மும்பை ஒசிவாரா போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அவர் மீது வழக்கை தொடர்ந்து நடந்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

போலீசாரின் இந்த அறிக்கையை நானா படேகரின் வக்கீல் வரவேற்று உள்ளார். அதேநேரத்தில், இது போலீசாரின் அலட்சியத்தை காட்டுவதாகவும் இதை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்று தனுஸ்ரீ தத்தாவின் வக்கீல் நிதின் சாத்புதே கூறினார்.


Next Story