பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்


பிரதம மந்திரி நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2019 10:30 PM GMT (Updated: 13 Jun 2019 11:31 PM GMT)

பிரதம மந்திரி நிதி உதவி திட்டத்தில் பயன்பெற அனைத்து விவசாயிகளும் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார். இதுகுறித்து கலெக்டர் சிவஞானம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

விருதுநகர்,

பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 2 எக்டேர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 நிதி உதவியானது, 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது சிறு, குறு, நடுத்தரம் மற்றும் பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே உயர் வருவாய் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இந்த திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்துக்கு முன்பே பட்டாதாரர் இறந்திருந்தாலும் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தனது தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால் அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் தாசில்தாரை அணுகி உரிய முறையில் விண்ணப்பம் அளித்து வருகிற 30-ந்தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

இதற்கென தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story