எஸ்.புதூர் ஒன்றியத்தில், வறட்சியால் பாதிப்படைந்து வரும் தென்னைகள்


எஸ்.புதூர் ஒன்றியத்தில், வறட்சியால் பாதிப்படைந்து வரும் தென்னைகள்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 11:31 PM GMT)

எஸ்.புதூர் ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் மழைபெய்யாததால் வறட்சி காரணமாக தென்னை மரங்கள் காய்ந்து வருகின்றன.

எஸ்.புதூர், 

எஸ்.புதூர் ஒன்றியம் மலையும் மலை சார்ந்த பகுதியாகவும், மாவட்டதின் எல்லையாகவும் உள்ளது. இங்கு விவசாயம் பிரதான தொழிலாகும். இங்குள்ள மக்கள் விவசாயத்தை மூலதனமாக நம்பி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் தென்னைகளை வளர்த்து விவசாயம் செய்து தங்களது பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் கடந்த நவம்பர் மாதத்தில் கஜா புயல் பாதிப்பால் எஸ்.புதூர் பகுதிகளில் பெரும்பாலன தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டன. விவசாயிகளுக்கு வாழ்வாதார பிரச்சினையாக இருந்து வந்தது. மாநில அரசு இலவச தென்னங் கன்றுகள் வழங்கிய நிலையில் அதனை வளர்த்து வருகின்றனர்.

கஜா புயலில் தப்பித்த மீதமுள்ள தென்னை மரங்கள் தற்போது கடும் வறட்சி மற்றும் போதிய மழையில்லாததால், நல்ல பருவ நிலையில் உள்ள தென்னை மரங்கள் குறுத்தோடு காய்ந்த நிலையில் சாய்ந்து வருகின்றன. ஒவ்வொரு தோப்பிலும் 2 அல்லது 3 ஆழ்துளை கிணறு அமைத்தும் போதிய நீர் கிடைக்கவில்லை. லாரிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னைகளுக்கு பாய்ச்சியும் மரங்களை காப்பாற்ற இயலவில்லை.

இதனால் தென்னைகளை நம்பி உள்ள விவசாயிகள் பெருமளவு பாதிப்பு அடைந்துள்ளனர். இவ்வாறு காய்ந்து சாய்ந்த மரங்களை மிகக்குறைந்த விலையாக ரூ.150 முதல் ரூ.200-க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தங்களது பிள்ளை போல் பாவித்து வளர்த்த தென்னை மரங்கள், பெற்ற பிள்ளைகள் கைவிட்டாலும், வளர்த்த தென்னை கைவிடாது என வளர்த்த தென்னை மரங்கள் தற்போது குறுத்தோடு காய்ந்து சாய்ந்து வருவதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கடந்த ஒருவாரமாக இந்த பகுதியில் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சமாக 50 முதல் 70 மரங்கள் வறட்சியால் பாதிப்படைந்து வியாபாரிகளுக்கு விற்கப்பட்டு வருகிறது. இவ்வாறு நல்ல பருவ நிலைக்கு வந்து தென்னை மரங்கள் சாய்ந்து வருவதால் தேங்காய் உற்பத்தி பெருமளவில் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விலை உச்சத்தை தொடவும் வாய்ப்பு உள்ளது. 

Next Story