ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்


ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 12:00 AM GMT (Updated: 14 Jun 2019 12:00 AM GMT)

ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை திரும்ப பெறக்கோரி அரசுக்கு எதிராக பெங்களூருவில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு, 

பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு 3,667 ஏக்கர் நிலத்தை கூட்டணி அரசு வழங்கி இருந்தது. அந்த நிலத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள நகைக்கடையில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் உள்ள காந்திசிலை முன்பு முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக் தலைமையில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ரவிகுமார், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தேஜஸ்வி சூர்யா எம்.பி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள், கூட்டணி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் ஆர்.அசோக் பேசியதாவது:-

பல்லாரியில் சட்டவிரோதமாக இரும்புதாது வெட்டி எடுக்கப்படுவதாக கூறி முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பாதயாத்திரை சென்றார். தற்போது சட்டவிரோதமாக பல்லாரியில் உள்ள ஜிந்தால் நிறுவனத்திற்கு 3,667 ஏக்கர் நிலத்தை கூட்டணி அரசு வழங்கியுள்ளது. அதுபற்றி கருத்து தெரிவிக்காமல் சித்தராமையா மவுனமாக இருப்பது ஏன்?.

கூட்டணி அரசில் நடைபெறும் ஊழல், பிற முறைகேடுகள் பற்றி சித்தராமையா கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்?. இதற்கான பதிலை சித்தராமையா கூற வேண்டும். ஜிந்தால் நிறுவனத்திற்கு வழங்கிய நிலத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில், எங்களது போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

கூட்டணி ஆட்சியில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தவறான தகவல்களை முதல்-மந்திரி குமாரசாமி கூறி வருகிறார். விவசாய கடனை தள்ளுபடி செய்யாமல் விவசாயிகளை குமாரசாமி ஏமாற்றி வருகிறார். வறட்சி பணிகளை மேற்கொள்வதில் கூட்டணி அரசுக்கு ஆர்வம் இல்லை. இந்த அரசு ஊழல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளது. இந்த ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்கப் போவதில்லை.

சிவாஜிநகரில் உள்ள நகைக்கடையில் நடந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரித்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு நியாயம் கிடைக்கப் போவதில்லை. சி.பி.ஐ. விசாரித்தால் மட்டுமே உண்மை வெளியேவரும். பணத்தை இழந்தவர்களுக்கும் நியாயம் கிடைக்கும். எனவே இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் பேசினார்.

பின்னர் அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி காந்தி சிலையில் இருந்து விதானசவுதாவை முற்றுகையிடுவதற்காக பா.ஜனதாவினர் புறப்பட்டு சென்றனர். ஆனால் விதானசவுதாவை முற்றுகையிடுவதற்கு பா.ஜனதாவினருக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து, ஆர்.அசோக், ரவிக்குமார், விஜயேந்திரா உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் விதானசவுதாவை முற்றுகையிட சென்ற ஆர்.அசோக் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து அழைத்து சென்றனர். அதன்பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story