உடன்குடி அருகே பயங்கரம் காட்டுப்பகுதியில் பெண் குத்திக்கொலை யார் அவர்? போலீசார் விசாரணை
உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடன்குடி,
உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் பெண் குத்திக்கொலை செய்யப்பட்டார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் கத்தியால் குத்திக்கொலை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் புதிதாக ஜோதி நகர் அமைக்கப்பட்டு உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக காட்டுப்பகுதியில் அமைந்துள்ள அப்பகுதியில் வீடுகள் எதுவும் கட்டப்படவில்லை.
அங்கு சாலையோரமாக கட்டப்பட்ட 2 கடைகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் உள்ளது. அந்த கடைகளின் பின்பக்க காம்பவுண்டு சுவரின் பின்னால் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை
நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் அருகில் ஆண்கள் அணியக்கூடிய மூக்கு கண்ணாடி கிடந்தது. அங்கு கார் வந்து சென்றதற்கான டயர்களின் தடமும் பதிவாகி இருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்?, அவரை கொலை செய்த கொலையாளிகள் யார்?, அவர்கள் எதற்காக அந்த பெண்ணை கொலை செய்தனர்?, காரில் அந்த பெண்ணை கடத்தி வந்து கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் மாயமான பெண்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரித்து வருகின்றனர். உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story