ஆரணியில் நெசவாளர்களுக்கு பட்டு சேலை வடிவமைப்பு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்


ஆரணியில் நெசவாளர்களுக்கு பட்டு சேலை வடிவமைப்பு பயிற்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 5:43 PM GMT)

ஆரணியில் நெசவாளர்களுக்கு பட்டு சேலை வடிவமைப்பு பயிற்சியை கலெக்டர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

ஆரணி, 

ஆரணி மண்டி வீதியில் உள்ள மதுரம் மகாலில் பட்டு சேலை வடிவமைப்பு நுணுக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் கைத்தறி நெசவாளர்களுக்கு வடிவமைப்பு பயிற்சி நடைபெற்றது.

பயிற்சிக்கு ஆர்.எம்.கே.வி. நிறுவன இயக்குனர் என்.மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார். பெங்களூரு டான் சில்க் செயலாளர் கே.எம்.அப்துல்காதர், காஞ்சீபுரம் டான் சில்க் செயலாளர் கே.ரகு, காஞ்சீபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குனர் டி.கார்த்திகேயன், திருவண்ணாமலை மாவட்ட கைத்தறி துணி நூல் துறை உதவி இயக்குனர் எம்.எஸ்.கே.சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடிவமைப்பாளர்கள் டாக்டர் ஆர்.ஜி.பன்னீர்செல்வம், கே.பி.கே.ஜெயராஜசிவம் ஆகியோர் வரவேற்றனர்.

சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு புதிதாக பட்டு சேலை வடிவமைப்பு பயிற்சியினை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஆரணிக்கு பெருமை சேர்க்கும் முக்கிய பிரதான தொழிலாக விளங்குவது, ஊருக்கு பெருமை சேர்ப்பது பட்டு சேலை தயாரிப்பு. அதிலும் தற்போது நிலவி வரும் காலத்திற்கேற்ப புதிய, புதிய வடிவமைப்புகள் அவசியம் தேவை.

பொருளாதார மையத்தில் புதிய பொருளாதார கொள்கை தேவைப்படுகிறது. மத்திய அரசால் சில்க் பார்க் ஆரணியில் விரைவில் தொடங்கப்படும். அதற்கான பணிகள்நடைபெற்று வருகிறது. சில்க் பார்க் தொடங்கினால் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் நேரடியாக கிடைக்கும் என்றார்.

இதில் ஆரணி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் குருராஜராவ், சில்க் பார்க் இயக்குனர் என்.சண்முகம், பட்டு சேலை தயாரிப்பாளர்கள் இ.செல்வன், கே.வி.குமார், ஜனார்த்தனன், ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story