வெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தந்தை– மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


வெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி; தந்தை– மகன் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 6:29 PM GMT)

வெள்ளோடு அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சென்னிமலை,

ஈரோடு பெரியசடையம்பாளையம், ரெயில்வே காலனி ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 51). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் காங்கேயம் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் தரணிராஜா (வயது 21). இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். சண்முகசுந்தரம் வேலை பார்க்கும் அதே கிளையில் வெள்ளோடு அருகே உள்ள கூத்தம்பட்டி, செம்பூத்தாங்காட்டை சேர்ந்த பழனிவேல் (வயது 39) என்பவர் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2016–ம் ஆண்டு தரணிராஜா, குரூப்–4 தேர்வு எழுதியிருந்தார்.

இதனை தெரிந்து கொண்ட கண்டக்டர் பழனிவேல், சண்முகசுந்தரத்திடம் பேசி உள்ளார். அப்போது அவர் தனது மகன் சந்தோஷ்குமார் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் வேலை பார்த்து வருவதாகவும், அதனால் எங்கள் வீட்டுக்கு வந்து என்னுடைய மகனை பாருங்கள், அரசு வேலை வாங்கி விடலாம் எனவும் கூறி உள்ளார். இதையடுத்து கடந்த 2016–ம் ஆண்டு பழனிவேல் வீட்டுக்கு சண்முகசுந்தரம் சென்றார்.

அப்போது சண்முகசுந்தரத்திடம், சந்தோஷ்குமார் எனது நெருங்கிய நண்பர் நாவப்பன் என்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பதுடன், தேர்வாணையத்திலும் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். எனவே அவரிடம் ரூ.7 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி விடலாம் என தெரிவித்து உள்ளார். இதை நம்பி சண்முகசுந்தரம் கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் மாதம் பழனிவேல் மற்றும் அவருடைய மகன் சந்தோஷ்குமாரிடம் முதல் கட்டமாக ரூ.5 லட்சத்தை கொடுத்தார்.

அதன்பின்னர் 2017–ம் ஆண்டு தரணிராஜாவை சந்தோஷ்குமார் சென்னைக்கு அழைத்து சென்று நுங்கம்பாக்கம் ரெயில் நிலையம் அருகில் நாவப்பன் என்பவரை ஐ.ஏ.எஸ். அதிகாரி என அறிமுகம் செய்து வைத்து உள்ளார். அப்போது நாவப்பன் விரைவில் பணி ஆணை வீட்டுக்கு வந்துவிடும் என தரணிராஜாவிடம் உறுதியளித்தார்.

இந்த நிலையில் கடந்த 17–8–2017 அன்று தரணிராஜாவை சந்தோஷ்குமார் தொடர்பு கொண்டு, பணி நியமன உத்தரவு தயாராகி விட்டது. விரைவில் தபாலில் வந்து விடும். எனவே மீதியுள்ள ரூ.2 லட்சத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் எனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என தரணிராஜா கூறினார். பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் பணி நியமனம செய்ய தேர்வு செய்யப்பட்டதற்கான ஒரு உத்தரவை 1–9–2017 அன்று வாட்ஸ்–அப் மூலம் தரணிராஜாவுக்கு சந்தோஷ்குமார் அனுப்பியுள்ளார்.

இதனை நம்பிய தரணிராஜா தனக்கு அரசு வேலை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சியில் மேலும் ரூ.2 லட்சத்தை சந்தோஷ்குமாரிடம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட சந்தோஷ்குமார், பணி ஒதுக்கீடு வந்ததும் நானே அழைத்து செல்கிறேன் என கூறியிருக்கிறார்.

ஆனால் பணி ஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவும் வராததால் சந்தோஷ்குமாரை செல்போனில் தரணிராஜா தொடர்பு கொண்ட போது அவர் பேசுவதை தவிர்த்தார். இதனால் கடந்த 18–1–2019 அன்று சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு சண்முகசுந்தரமும், அவருடைய மகன் தரணிராஜாவும் சென்று பணத்தை கேட்டு உள்ளனர். ஆனால் பழனிவேலுவும், அவருடைய மகன் சந்தோஷ்குமாரும் பணத்தை கொடுக்க மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதை சண்முகசுந்தரமும், அவருடைய மகன் தரணிராஜாவும் உணர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து வெள்ளோடு போலீசில் சண்முகசுந்தரம் புகார் அளித்தார். அதன் பேரில் வெள்ளோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்ததாக அரசு பஸ் கண்டக்டர் பழனிவேல், அவருடைய மகன் சந்தோஷ்குமார், நாவப்பன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகிறார்.


Next Story