ஈரோட்டில் கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோட்டில் கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:45 PM GMT (Updated: 14 Jun 2019 6:29 PM GMT)

ஈரோட்டில் கருப்பு பட்டை அணிந்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு,

டாக்டர்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளை சார்பில் சம்பத்நகரில் உள்ள சங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.சுகுமார் தலைமை தாங்கினார். சங்க ஈரோடு மாவட்ட நிதி செயலாளர் டாக்டர் எஸ்.டி.பிரசாத் முன்னிலை வகித்தார். இதில் கருப்பு பட்டைகளை அணிந்துகொண்டு பங்கேற்ற டாக்டர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதுகுறித்து சங்கத்தின் ஈரோடு மாவட்ட செயலாளர் டாக்டர் எம்.சக்கரவர்த்தி கூறியதாவது:-

கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர் பரிபா முகர்ஜி உள்பட சில டாக்டர்களை வன்முறை கும்பல் தாக்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஆஸ்பத்திரி மற்றும் டாக்டர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக கடுமையான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பலரது உயிர்களை காப்பாற்றும் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

வன்முறை மற்றும் அச்சுறுத்துதல் காரணமாக நோயாளிகளின் மீது தனி கவனம் செலுத்த முடியாமல் டாக்டர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர். இதனால் பொது சுகாதாரம், நோயாளிகள், டாக்டர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப் படுகிறார்கள். எனவே ஆஸ்பத்திரிகளை சிறப்பு மண்டலங்களாக அறிவித்து முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும்.

எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் தொடர்பாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவர் சங்க தலைவர் தியாகு தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தாவில் டாக்டர் மீது நடைபெற்ற தாக்குதலை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், செயலாளர் கார்த்திகேயன், டாக்டர்கள் சுப்பிரமணியம், சசிகலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story