இளையான்குடி அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி


இளையான்குடி அருகே பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் பலி
x
தினத்தந்தி 14 Jun 2019 11:00 PM GMT (Updated: 14 Jun 2019 6:52 PM GMT)

இளையான்குடி அருகே பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார், 2 பேர் பலத்த காயமடைந்தனர்.

இளையான்குடி,

இளையான்குடி தாலுகா அண்டக்குடி கிராம புதூர் வலசையை ேசர்ந்தவர் மணிகண்டன் (வயது 32). இவருடைய நண்பர்கள் அண்ணாத்துரை (30) மற்றும் சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (32). இவர்கள் அனைவரும் ஒரு காரில் வேலை விஷயமாக பரமக்குடிக்கு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மானாமதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். பிராமணக்குறிச்சி கிராமம் அருகே வந்த போது, மானாமதுரையில் இருந்து ஒரு அரசு பஸ் பரமக்குடிக்கு சென்றது. அந்த பகுதியில் இருந்த ஒரு வளைவில் பஸ் வந்த போது, எதிர்பாராத நிலையில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

அதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த நிலையில் அதன் இடிபாடுகளில் உள்ளிருந்த 3 பேரும் சிக்கிக் கொண்டனர். விபத்தில் காரை ஓட்டி வந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதைத்தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த அண்ணாத்துரை, ஜெயப்பிரகாஷ் ஆகியோரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்தில் அரசு பஸ்சின் கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்து இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story