தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.3½ லட்சம் மோசடி 2 பேர் கைது


தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.3½ லட்சம் மோசடி 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 14 Jun 2019 7:07 PM GMT)

தனியார் பள்ளி நிர்வாகியிடம் ரூ.3½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராசிபுரம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருப்பூர் மாவட்டம் வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகன் மோகன் (வயது 35). தனியார் பள்ளி நிர்வாகி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக ந‌‌ஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவரிடம் கடந்த மூன்று மாதங்களாக பாலாஜி என்பவரும், பாலாஜியின் மாமாவும் செல்போனில் தொடர்பு கொண்டு 100 ரூபாய் நோட்டுகள் நிறைய வைத்திருப்பதாகவும், அதை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றித்தந்தால் அதற்கு 20 சதவீத கமி‌‌ஷன் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.

அவர்களது பேச்சை நம்பிய தனியார் பள்ளி நிர்வாகி மோகன் பள்ளிக்கட்டண தொகை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக எடுத்துக்கொண்டு கடந்த 11-ந் தேதி காரில் ராசிபுரம் வந்துள்ளார். அவர் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோடு பகுதியில் வந்தபோது ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த காரில் பாலாஜியும், அவரது மாமாவும், மோகனை காரின் பின்பக்க சீட்டில் உட்கார வைத்துக்கொண்டு ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தி மோகனை காரின் முன்சீட்டில் உட்கார சொல்லி உள்ளனர். அப்போது காரில் இருந்து மோகன் இறங்கியவுடன் அவர்கள் இருவரும் மோகனிடம் பெற்ற ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துடன் தப்பி சென்றுவிட்டனர்.

இதுபற்றி மோகன் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் ஆண்டகளூர்கேட்டில் நாமக்கல்லில் இருந்து வந்த ஒரு பஸ்சில் இருந்து 2 பேர் இறங்கி உள்ளனர். அப்போது அங்கு போலீசாருடன் இருந்த மோகன் அந்த இருவரையும் அடையாளம் காட்டினார்.

இதையொட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மோகனிடம் பெயரை மாற்றி பாலாஜி என கூறியது தெரியவந்தது.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், பள்ளி நிர்வாகி மோகனிடம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை ஏமாற்றி மோசடி செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையொட்டி அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான ஒருவரது பெயர் மோகன் என்கிற சுனில்குமார் (46). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சேர்ந்தவர். தற்போது இவர் கரூர் விநாயகர் கோவில் அருகில் வசித்து வருகிறார். இன்னொருவர் விழுப்புரம் மாவட்டம் அரியாநத்தம் வேதமாணிக்கத்தின் மகன் கோபு (29) ஆவார். அவர்கள் செலவு செய்தது போக வைத்திருந்த ரூ.3 லட்சத்து 41 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

கைது செய்யப்பட்ட மோகன் என்கிற சுனில்குமார் மற்றும் கோபு ஆகிய 2 பேரையும் போலீசார் ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த ராசிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசாரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.

Next Story