தொழில் அதிபரை கடத்த முயன்ற 2 பேர் கைது: ரூ.1 கோடி பணம் பறிக்க திட்டமிட்டது அம்பலம்


தொழில் அதிபரை கடத்த முயன்ற 2 பேர் கைது: ரூ.1 கோடி பணம் பறிக்க திட்டமிட்டது அம்பலம்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:45 PM GMT (Updated: 14 Jun 2019 7:26 PM GMT)

சேலத்தில் தொழில் அதிபரை கடத்த முயன்ற சம்பவத்தில் 2 பேர் கைது ெசய்யப்பட்டனர். ரூ.1 கோடி பணம் பறிக்க திட்டமிட்டது போலீஸ் விசாரணையில தெரியவந்தது.

சேலம், 

சேலம் அழகாபுரம் சிவாயநகரை ேசர்ந்தவர் காளீஸ்வரன் (வயது 46). 5 ரோடு பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவர், கடந்த 9-ந் தேதி ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம்.மையத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை செலுத்த மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரை பின் தொடர்ந்து வந்த ஆம்னிவேன் திடீரென காளீஸ்வரன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது ேமாதியது. இதில் நிலைதடுமாறிய அவர் சாலையில் விழுந்தார். அப்போது, காரில் இருந்து இறங்கிய 6 பேர், அவரை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அந்த சமயத்தில் காளீஸ்வரன் சத்தம்போட்டு கூச்சலிட்டதால் அவர்கள், அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அதில், கடத்தல் கும்பலின் காரின் பதிவு எண், அவர்களது உருவமும் பதிவாகியிருந்தது.

விசாரணையில், தொழில் அதிபரை கடத்த முயன்றது 6 பேர் கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து தப்பிஓடிய மர்ம ஆசாமிகளின் கார் எண் பதிவு வைத்து போலீசார் விசாரணை நடத்தி, மணக்காடு பகுதியை சேர்ந்த சந்தோஷ் (24), சின்னதிருப்பதியை சேர்ந்த காசி விஸ்வநாதன் (26) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், சந்தோஷ் எலக்ட்ரீசியனாகவும், காசிவிஸ்வநாதன் கார் புரோக்கராகவும் வேலை செய்து வருகின்றனர். இந்த கடத்தல் கும்பல் தலைவனாக கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தொழில் அதிபர் காளீஸ்வரனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டது தெரியவந்துள்ளது.

அதாவது, சேலத்தில் அவர் ரூ.3½ கோடி செலவில் பிரமாண்டமான பங்களா ஒன்றை கட்டியுள்ளார். இதனை நோட்டமிட்ட ரவுடி கும்பல், காளீஸ்வரனை கடத்தினால் ரூ.1 கோடி வரை பறித்துவிடலாம் என திட்டமிட்டுள்ளனர். சில நாட்களாகவே அவர் கடையில் இருந்து எப்போது வருகிறார்? என்பதை நோட்டமிட்டுள்ளனர்.

அதன்படி சம்பவத்தன்று காளீஸ்வரனை காரில் கடத்த முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதனால் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரபல ரவுடியையும், இவரது கூட்டாளிகளையும் கைது செய்ய போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story