மார்த்தாண்டத்தில் ஆட்டோ டிரைவர் கண்டெடுத்த தங்க டாலர் உரியவரிடம் ஒப்படைப்பு


மார்த்தாண்டத்தில் ஆட்டோ டிரைவர் கண்டெடுத்த தங்க டாலர் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 10:09 PM GMT)

மார்த்தாண்டத்தில் ஆட்டோ டிரைவர் கண்டெடுத்த தங்க டாலர் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குழித்துறை, 

மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 35), ஆட்டோ டிரைவர். இவர் சம்பவத்தன்று தனது ஆட்டோவை வெட்டுமணி நிறுத்தத்தில் நிறுத்தியிருந்தார். அப்போது அந்த பகுதியில் நடந்து சென்ற போது சுமார் 1 பவுன் எடையுள்ள தங்க டாலர் ஒன்றை கண்டெடுத்தார்.

பின்னர் அதனை உரியவரிடம் ஒப்படைக்க நினைத்தார். உடனே, தனது செல்போனில் தங்க டாலரை புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ்-அப்பில் பலருக்கு அனுப்பினார். யாரும் உரிமை கோரி வராததால், மார்த்தாண்டம் போலீசிடம் தங்க டாலரை ஒப்படைத்தார்.

இந்த நிலையில் பளுகலை சேர்ந்த ஸ்டாலின் என்பவருடைய மனைவி ரம்யா (31) மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு சென்று வாட்ஸ்-அப்பில் பதிவிட்டுள்ள தங்க டாலர் என்னுடையது என்று கூறி அதற்கான ஆதாரத்தை காட்டினார். ரம்யா வெட்டுமணியில் உள்ள குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விட்டு சென்ற போது, நகையில் உள்ள டாலர் தவறி கீழே விழுந்துள்ளது. இந்த டாலர் தான் ராஜேஸின் கையில் சிக்கியது தெரிய வந்தது.

இதனையடுத்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆட்டோ டிரைவர் ராஜேஷ் முன்னிலையில் அந்த டாலரை ரம்யாவிடம் ஒப்படைத்தார். மேலும் ராஜேசை பாராட்டி இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கினார்.

Next Story