கணவரின் குடும்பத்தினரை தாக்கி, காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்


கணவரின் குடும்பத்தினரை தாக்கி, காதல் திருமணம் செய்த பெண் காரில் கடத்தல்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:30 PM GMT (Updated: 15 Jun 2019 12:14 AM GMT)

கணவரின் குடும்பத்தினரை தாக்கி காதல் திருமணம் செய்த பெண்ணை காரில் கடத்தி சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மணிவாசன் (வயது 22), கடவூர் அருகே உள்ள செம்பியாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. இவரது மகள் ரம்யா (20). இவரும், மணிவாசனும் கரூரில் உள்ள தனியார் ஜவுளிநிறுவனத்தில் வேலைபார்த்து வந்தனர். அப்போது, இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்தநிலையில் ரம்யாவுக்கு திருமணம் ஏற்பாடு நடைபெற்றது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் ரம்யாவும் மணிவாசனும், தோகைமலை அருகே உள்ள மங்காம்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் நேற்று இரவு அவர்கள் தோகைமலை போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி தஞ்சம் அடைந்தனர்.

தோகைமலை போலீசார் இருவீட்டார் பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ரம்யா தான் கணவனுடன் செல்கிறேன் என்று கூறியதை அடுத்து போலீசார் இருவரையும் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ரம்யா, மணிவாசன் மற்றும் மணிவாசனின் தந்தை சேகர், தாயார் அமுதா ஆகியோர் ஒரு காரில் புறப்பட்டு வீட்டுக்கு சென்றனர்.

இதற்கிடையில் அவர்கள் சென்ற காரை ரம்யாவின் உறவினர்கள், மற்றொரு காரில் பின்தொடர்ந்து சென்றனர். மேட்டுப்பட்டி பாலம் அருகே சென்றதும், மணிவாசன் குடும்பத்தினர் சென்ற காரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் சேகர், அமுதா, மணிவாசன் ஆகியோரை தாக்கி ரம்யாவை தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர். இதில் அந்த கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த மணிவாசன், சேகர், அமுதா ஆகியோர் குளித்தலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவை காரில் கடத்தி சென்ற கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story