புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பட்டியல் வெளியீடு


புதுவை அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 15 Jun 2019 2:30 PM GMT (Updated: 15 Jun 2019 1:25 PM GMT)

புதுவையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சென்டாக் கன்வீனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையில் புதுவை மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த பட்டியல் சென்டாக் இணையதளத்தில் நேற்று வெளியானது. இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை மாணவர்கள் சென்டாக் இணைய தளத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்னர் அவர்கள் அந்த கல்லூரிகளில் நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல் வருகிற 20-ந் தேதி மாலை 5 மணிக்குள் சேர வேண்டும்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2-ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கு 809 இடங்கள் உள்ளன. இதற்காக 418 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 15 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

புதுவை மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு முடிந்த பின்னர் பிற மாநில மாணவர்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story