வைக்கோல் வாங்க வெளி மாவட்ட விவசாயிகள் தஞ்சைக்கு வருகை ஒரு கட்டு ரூ.150-க்கு விற்பனை


வைக்கோல் வாங்க வெளி மாவட்ட விவசாயிகள் தஞ்சைக்கு வருகை ஒரு கட்டு ரூ.150-க்கு விற்பனை
x
தினத்தந்தி 15 Jun 2019 10:30 PM GMT (Updated: 15 Jun 2019 7:19 PM GMT)

வைக்கோல் தட்டுப்பாடு-விலை உயர்வு எதிரொலியால் வெளி மாவட்ட விவசாயிகள் வைக்கோல் வாங்க தஞ்சைக்கு வருகின்றனர். ஒரு கட்டு ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் மாதம் திறக்கப்படுவது வழக்கம்.

அப்படி வழக்கம்போல் தண்ணீர் திறக்கப்பட்டால் அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தவுடன் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். சம்பா, தாளடி சாகுபடியும் அதிக பரப்பளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடி முடிந்தவுடன் கோடைநெல் சாகுபடியை ஆழ்குழாய் கிணறு மூலம் செய்திருந்தனர். அந்த கோடைநெல் நன்றாக விளைந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை முடிந்த வயல்களில் வைக்கோல்கள் கிடக்கின்றன.

அறுவடையின்போது நெற்கதிர்கள் தனியாகவும், வைக்கோல் தனித்தனியாகவும் பிரித்தெடுக்கப்படும். ஈரப்பதம் உள்ள வைக்கோலை விவசாயிகள் வயல்வெளிகளில் உலர வைப்பார்கள். இந்த வைக்கோலை விவசாயிகள் சேகரித்து, போர் போட்டு அடைத்து வைத்து, தேவைப்படும்போது கால்நடைகளுக்கு பயன்படுத்துவது தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

வைக்கோல் போர் வைப்பதற்காகவே விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு பின்புறம் இடத்தை ஒதுக்கி வைத்து இருப்பார்கள். அடைமழை பெய்தால் கூட வைக்கோல் போருக்குள் ஒரு சொட்டு தண்ணீர் கூட இறங்காது. ஆனால் இன்றைக்கு வைக்கோல் போர்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு வேலை செய்ய தற்போது தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. மேலும் வைக்கோல் போர் குவியலாக இருப்பதால் கரப்பான் பூச்சி, கரையான், பாம்பு உள்ளிட்டவை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக வயலில் நெல் அறுவடைக்கு பின் வைக்கோலை சேகரித்து தனியாக கட்டாக கட்டி அடுக்கி வைக்கின்றனர். உழவு பணிக்கு மாடுகளுக்கு பதிலாக டிராக்டர்கள் அதிகஅளவு பயன்படுத்தப்படுகின்றன. நாற்றுநடவு செய்யும் எந்திரம், அறுவடை செய்யும் எந்திரம், விதையிடும் கருவி என பல்வேறு வகையான கருவிகள் புதிது, புதிதாக வந்துள்ளன.

முன்பெல்லாம் வைக்கோலை கட்டாக கட்டுவதற்கு தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஆனால் வைக்கோலை சேகரித்து தனியாக கட்டாக கட்டுவதற்கும் தற்போது எந்திரம் வந்துவிட்டது. கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் பல சிக்கல்கள் இருப்பதால் வைக்கோல் கட்டும் எந்திரத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் சூரக்கோட்டை பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் கிடந்த வைக்கோல்களை கட்டாக கட்டும் பணி நடைபெற்றது. டிராக்டர் மூலம் இணைக்கப்பட்ட சிறிய எந்திரம் மூலம் வைக்கோலை சுருட்டி கட்டுகளாக கட்டப்பட்டன.

அறுவடை முடிந்த வயல்களில் எல்லாம் வைக்கோல்கள் கட்டாக கட்டப்பட்டு கிடக்கின்றன. விவசாயிகள், வியாபாரிகள் வந்து வைக்கோல்களை விலைக்கு வாங்கி செல்கின்றனர். கேரளா மட்டுமின்றி ஈரோடு, கோவை போன்ற பகுதிகளில் வைக்கோல் தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் உயர்ந்துள்ளது. இதனால் வைக்கோல் வாங்க வெளி மாவட்ட விவசாயிகள், வியாபாரிகள் தஞ்சை மாவட்டத்திற்கு வருகின்றனர். இதனால் இங்கேயும் வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டு வைக்கோல் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, எந்திரம் மூலம் ஒரு கட்டு கட்ட ரூ.40 செலவாகிறது. பிற மாவட்டங்களில் வந்து வைக்கோலை வாங்கி செல்கின்றனர். வெளி மாவட்டங்களில் ஒரு வைக்கோல் கட்டு ரூ.230 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் ரூ.150 வரை விற்கப்படுகிறது. அதேபோல கேரளாவிலும் வைக்கோல் கட்டு விலை அதிகம். அதனால் கேரளாவில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் தஞ்சைக்கு வருவதால் வைக்கோல் தட்டுப்பாடு நிலவுகிறது. வைக்கோல் கட்டு விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

Next Story